புதுடெல்லி: இந்தியாவின் முதன்மையான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கிண்ணப் போட்டிகளில், கடந்த 39 ஆண்டுகளில் முதன்முறையாக ஓர் இன்னிங்சில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்திச் சாதித்துள்ளார் ஹரியானா மாநில வேகப் பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ்.
கேரள மாநில அணிக்கெதிராக ரோஹ்டக்கில் நடந்துவரும் போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் அச்சாதனையைப் படைத்தார்.
முதல் இன்னிங்சில் கேரள அணி 291 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. 30.1 ஓவர்களை வீசிய கம்போஜ், 49 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து, கேரள அணிக்கு மிகப் பெரிய சவாலாகத் திகழ்ந்தார்.
ரஞ்சிக் கிண்ணத் தொடரில் பத்து விக்கெட்டுகளையும் அள்ளிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் தேடிக்கொண்டார் 23 வயதான கம்போஜ்.
இவர், இவ்வாண்டு நடந்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 1956-57 பருவத்தில் அசாமுக்கு எதிரான போட்டியில் வங்காளத்தின் பிரேமங்சு சட்டர்ஜியும், 1985-86 பருவத்தில் விதர்பாவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தானின் பிரதீப் சுந்தரமும் ஒரே இன்னிங்சில் பத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.