இவ்வாண்டு செப்டம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை ஏற்று நடத்துவதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கிறது.
ஆனால், பாதுகாப்பைக் காரணம் காட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது அணியை அனுப்ப தயாராக இல்லை எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த காலத்தில் பாகிஸ்தான் அணிக்கு இந்தியர் ஒருவர் மிரட்டல் விடுத்தார் என்றும் ஆனால் அதனை ஒருபொருட்டாகக் கருதாமல் பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாட முடிவுசெய்தது என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஷாகித் அஃப்ரிடி.
‘லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ போட்டியின்போது ஊடகத்திடம் உரையாடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஆசியக் கிண்ணத்தில் இந்தியாதான் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி வருகிறது. நீங்கள் இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள். நாங்கள் இருகரம் நீட்டி வரவேற்போம்,” என்றார் அஃப்ரிடி.
“இதற்குமுன், பாகிஸ்தான் அணியை இந்தியாவிற்குள் விடமாட்டோம் என்று மும்பையைச் சேர்ந்த ஒருவர் எங்களுக்கு மிரட்டல் விடுத்தார். அவரது பெயரைக் கூற விரும்பவில்லை. ஆனாலும், அதனைப் புறக்கணித்து நாங்கள் இந்தியா சென்றோம். அச்சுறுத்தல்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், அவை நமது உறவைச் சிதைத்துவிடக்கூடாது,” என்றார் அவர்.