பர்மிங்காம்: உலக கிரிக்கெட் சகாப்தங்களுக்கான வெற்றியாளர் தொடரில் பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவிருந்த இந்தப் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பிரெட் லீயும் ஷாஹித் அஃப்ரிடியும் தங்களது கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் அனைத்துலக கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த 18ஆம் தேதி இந்த தொடர் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைச் சுட்டிக்காட்டி இந்திய வீரர்கள், பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இந்தத் தொடரில் இந்திய அணியை யுவராஜ் சிங் கேப்டனாக வழிநடத்துகிறார். ஹர்பஜன் சிங், இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
“நான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவது குறித்த முடிவை அவர்கள்தான் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் இங்கு கிரிக்கெட் தொடரில் விளையாட வந்துள்ளோம். நேற்று நடந்தது முடிந்து போன விஷயம். அதனால் இந்தத் தொடரில் அடுத்து என்ன என்பதை நோக்கி பயணிக்க வேண்டியது அவசியம்,” என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ கூறியுள்ளார்.
“விளையாட்டு தேசங்களை நெருக்கமாக இணைக்கிறது. அனைத்திலும் அரசியல் என்றால் எப்படி முன்னேற்றம் காண முடியும்? முறையான உரையாடலோ, தொடர்பியலோ இல்லாத போது எப்படி தீர்வு கிடைக்கும். இது மாதிரியான நிகழ்வுகள் ஒருவரை ஒருவர் நாம் சந்தித்துக் கொள்வதற்கே நடைபெறுகிறது. ஆனால், எப்போதும் ஒரே ஓர் அழுகிய முட்டை அனைத்தையும் பாழ் ஆக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்,” என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிடி கூறியுள்ளார்.
பாகிஸ்தானுடன் விளையாட விருப்பமில்லை என்றால் சனிக்கிழமை அன்று இந்திய வீரர்கள் ஏன் பயிற்சி மேற்கொண்டனர் என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

