இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு முதல்முறையாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்குகிறது.
முன்னதாக, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும் விராத் கோஹ்லியும் டெஸ்ட் போட்டிகளிலிலிருந்து ஓய்வுபெறுவதாக அடுத்தடுத்த அறிவித்திருந்தனர். அவர்களது ஓய்வு முடிவு இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், புதிய அணித்தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
இந்த நிலையில், மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் சனிக்கிழமை (மே 24) நடைபெற்ற கூட்டத்தில், இந்திய அணித்தலைவர், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய வீரர்களின் பெயர் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
அணித்தலைவராக ஷுப்மன் கில்
அதன்படி, புதிய அணித்தலைவராக ஷுப்மன் கில்லும் துணை அணித்தலைவராக ரிஷப் பன்ட்டும் நியமியக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் தொடக்க ஆட்டக்காரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சாய் சுதர்சனுக்கு முதல்முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, அபிமன்யு ஈஸ்வரனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் கருண் நாயருக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 2016ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தமது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றி கருண் நாயர் அசத்தியிருந்தார். அப்போட்டியில் 303 ஓட்டங்கள் விளாசி ஆட்டநாயகன் விருது வென்ற அவர், அதன்பின்னர் சரியாக சோபிக்காததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு தற்போது மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் ஏலத்தில் விற்பனை ஆகாமல்போன நிலையில், லக்னோ அணிக்காக பாதியில் இணைந்து அசத்தலாக விளையாடி விக்கெட் வீழ்த்தி அசத்திய ஷர்துல் தாக்கூருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முழு உடற்தகுதியை எட்டாததால் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, பந்தடிப்பாளர் சர்ஃப்ராஸ் கான் இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்
ஷுப்மன் கில் (அணித்தலைவர்), ரிஷப் பன்ட் (துணை அணித்தலைவரும் விக்கெட்காப்பாளரும்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.