இந்திய பிரிமியர் கிரிக்கெட் (ஐபிஎல்) 2023 தொடங்கிவிட்டது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதகாலத்துக்கு கிரிக்கெட் ஆட்டங்களின் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.
இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் ஐபிஎல் தொடக்க விழா வெள்ளிக்கிழமை (மார்ச் 31) விமரிசையாக நடந்தேறியது.
திரைப் பிரபலங்களான தமன்னா பாட்டியா, ராஷ்மிகா மந்தனாவின் நடனப் படைப்புகளும் அரிஜித் சிங்கின் பாடல்களும் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்தன.
இந்நிலையில், மேடையில் இடம்பெற்ற ஒரு காட்சி சமூக ஊடகங்களில் பரவலாகியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் காலைத் தொட்டு பாடகர் அரிஜித் சிங் ஆசிபெறுவதைக் காட்டும் அந்தக் காட்சி, இணையவாசிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
பொதுவாக, திரைப் பிரபலங்களைத் தேடிவரும் புகழைத் தவிர்த்துக்கொள்பவராகவும் தன்னடக்கம் உடையவராகவும் அரிஜித் சிங் கருதப்படுகிறார்.
அதுவும், டோனியின் முன்னிலையில் தன்னடக்கமாக நடந்துகொண்ட அரிஜித் சிங், இணையவாசிகளிடமிருந்து கூடுதல் மரியாதையைப் பெற்றுள்ளார்.
“அரிஜித் சிங்கே ஒரு சகாப்தம். ஆனாலும், அவ்வளவு எளிமையாக, தன்னடக்கமாக அவர் நடந்துகொள்கிறார். பாலிவுட்டில் இவரைப்போல எளிமையான மனிதரை நான் பார்த்ததில்லை. சகாப்தத்திற்கு மரியாதை செலுத்தும் சகாப்தம்,” என்று டுவிட்டர் பயனாளர் ஒருவர் பதிவிட்டார்.