தோக்கியோ: தொழில்முறையற்ற காற்பந்து அணியான ஒயாமா காற்பந்துச் சங்கத்துக்கு எதிரான ஃபுகுஷிமா யுனைடெட்டின் 7-0 என்ற கோல் கணக்கிலான வெற்றி ஆட்டத்தில், 59 வயதான முன்னாள் ஜப்பான் அனைத்துலக வீரர் கசுயோஷி மியூரா இரண்டு பெனால்டி கோல்களை அடித்து, பேரரசர் கிண்ண வரலாற்றில் மிக வயதான கோல் அடித்தவர் என்ற பெருமையை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) பெற்றார்.
59 வயது, 5 மாதம், 24 நாள்களில் இந்தப் போட்டிக்காக கோல் அடித்தபோது 41 வயதாக இருந்த முன்னாள் ஜப்பான் மத்திய திடல் வீரர் ஷின்ஜி ஓனோ வைத்திருந்த சாதனையை மியூரா முறியடித்தார்.
‘கிங் கசு’ என்ற புனைப்பெயர் கொண்டவரும், தற்போது ஒரு தொழில்முறை காற்பந்து வீரராக தனது 42வது பருவத்தில் இருப்பவருமான மியூரா, கடந்த மாதம் நடைபெற்ற போட்டியின் தகுதிச் சுற்றுகளில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் கோலை அடித்திருந்தார்.
புதன்கிழமை நடந்த முதல் சுற்றுப் போட்டியின் 12வது நிமிடத்தில், அந்த அனுபவமிக்க தாக்குதல் வீரர் பெனால்டி மூலம் முதல் கோலை அடித்தார். பின்னர், ஆட்டத்தின் பிற்பாதியின் 10வது நிமிடத்தில் இரண்டாவது பெனால்டியையும் அடித்து, மூன்று நிமிடங்கள் கழித்து மாற்று வீரராக வெளியேற்றப்பட்டார்.
“எப்போது உங்கள் முறை வரும் என்று தெரியாது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். “அதனால்தான் நான் தொடர்ந்து பயிற்சி செய்கிறேன். அது பலனளித்ததில் எனக்கு மகிழ்ச்சி,” என்றார்.
மியூரா தனது தொழில்முறை வாழ்க்கையை 1986ல் பிரேசிலில் தொடங்கினார். அதன் பிறகு இத்தாலி, குரோவேஷியா, ஆஸ்திரேலியா, போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் விளையாடியுள்ளார்.
ஜப்பான் குழுவுக்காக 89 போட்டிகளில் 55 கோல்களை அடித்த அந்த தாக்குதல் வீரர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் யோகோஹாமா காற்பந்து அணியிலிருந்து மூன்றாம் நிலை அணியான ஃபுகுஷிமாவில் இணைந்தார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.


