அனுராதபுரம்: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் லகிரு திரிமானே, 34, அனுராதபுரத்தில் வியாழக்கிழமை (மார்ச் 14) காலை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தார்.
திரிமானே சென்ற காரும் எதிரில் வந்த லாரியும் மோதியதாகக் காவல்துறை தெரிவித்தது. காலை 7.45 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.
காரில் சென்ற மேலும் மூவரும் லாரி ஓட்டுநரும் காயமடைந்தனர் என்றும் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் இலங்கை ஊடகச் செய்தி தெரிவித்தது.
இதனிடையே, ‘லெஜண்ட்ஸ் கிரிக்கெட் கிண்ணம் 2024’ போட்டியில் திரிமானே இடம்பெற்றுள்ள நியூயார்க்ஸ் ஸ்டிரைக்கர்ஸ் அணி விபத்து தொடர்பில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“திரிமானேவும் அவருடைய குடும்பத்தாரும் காரில் கோவிலுக்குச் சென்றபோது விபத்தில் சிக்கினர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என்பதையும் கவலைப்படத் தேவையில்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்,” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு அனைத்துலகப் போட்டிகளில் அறிமுகமான இடக்கைப் பந்தடிப்பாளரான திரிமானே, 44 டெஸ்ட், 127 ஒருநாள், 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சென்ற 2023ஆம் ஆண்டு அவர் அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.