மிட்சுபிஷி எலெக்ட்ரிக் ஆசியான் வெற்றியாளர் காற்பந்துக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் சிங்கப்பூரும் வியட்னாமும் மோதுகின்றன.
அரையிறுதிக்கான முதல் ஆட்டம் சிங்கப்பூரின் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் டிசம்பர் 26ஆம் தேதி நடைபெறுகிறது.
அதற்கான நுழைவுச்சீட்டுகள் டிசம்பர் 22ஆம் தேதி நண்பகலிலிருந்து விற்பனைக்கு விடப்பட்டன.
நுழைவுச்சீட்டுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விலை $24, $35, $49.
நுழைவுச்சீட்டுகளை ஜாலான் புசார் விளையாட்டரங்கில் மட்டுமே வாங்க முடியும். உள்ளூர் ரசிகர்கள் மட்டுமே இந்த நுழைவுச்சீட்டுகளை வாங்க முடியும். அவர்களுக்காக பெரும்பாலான நுழைவுச்சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவற்றை வாங்க செல்லும் ரசிகர்கள் தங்கள் அடையாள அட்டை அல்லது தங்கள் அடையாளத்துக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். ஒருவர் ஒரே நேரத்தில் அதிகபட்சம் நான்கு நுழைவுச்சீட்டுகளை மட்டுமே வாங்கலாம்.
வியட்னாமிய ரசிகர்களுக்கு ஏறத்தாழ 300 நுழைவுச்சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விலை தலா $38.
வியட்னாமிய ரசிகர்களுக்காக ஒதுக்கப்பட்ட நுழைவுச்சீட்டுகளை ஆட்டம் நடைபெறும் நாளன்று பிற்பகல் 3 மணியிலிருந்து ஆட்டம் முடிய அரை மணி நேரம் இருக்கும் வரை வாங்கலாம்.
தொடர்புடைய செய்திகள்
ஜாலான் புசார் விளையாட்டரங்கில் அதிகபட்சமாக ஏறத்தாழ 6,000 ரசிகர்கள் ஆட்டத்தை நேரில் கண்டு ரசிக்கலாம்.
இந்நிலையில், ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்துக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்க ரசிகர்கள் டிசம்பர் 22ஆம் தேதியன்று ஜாலான் புசார் விளையாட்டரங்கில் அலையெனத் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ரசிகர்கள் சிலருக்கு சிங்கப்பூர் குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் ஹாரிஸ் ஹருண் நேரில் நுழைவுச்சீட்டுகளைக் கொடுத்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.