லக்னோ: உலக அளவில் பெரும்பணம் புரளும் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரும் ஒன்று.
மொத்தம் பத்து அணிகள் பங்குபெறும் அத்தொடரில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.
அத்தொடரில் சிறப்பாக விளையாடி, பின் தேசிய அணிக்குத் தேர்வாகி, அனைத்துலகப் போட்டிகளில் மிளிர்ந்தவர்களும் உண்டு.
சென்னையைச் சேர்ந்த இந்திய ஆட்டக்காரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
அதனால், கிரிக்கெட் பித்தர்கள் நிறைந்த இந்தியாவில் பலருக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதே லட்சியமாக இருக்கும்.
அந்த ஆசையில் பணத்தைக் கொடுத்து ஏமாந்து, இப்போது புலம்பி வருகிறார் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் சிங் என்ற இளையர்.
லக்னோவில் உள்ள விளையாட்டுக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற அவர், கடந்த 2019ஆம் ஆண்டு கிருஷ்ண குமார் ஜா என்பவரை முதன்முதலில் சந்தித்தார்.
ரூ.17 லட்சம் தந்தால் அபிஷேக்கை ஐபிஎல் அணிகளில் ஒன்றில் சேர்த்துவிடுவதாகக் கூறி ஆசைகாட்டினார் கிருஷ்ணா. அதற்குத் தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்று அபிஷேக் கூறினார்.
ஆயினும், அவரைத் தன் வலையில் வீழ்த்தியே தீருவது என்பதில் உறுதியாக இருந்த கிருஷ்ணா, ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால் மாநில அணியில் சேர்த்துவிடுகிறேன் என்றும் அதன்பின் ஐபிஎல்லுக்கு முன்னேறிவிடலாம் என்றும் சொன்னார்.
எப்படியோ ஐந்து லட்ச ரூபாயைப் புரட்டி, அவரிடம் கொடுத்தார் அபிஷேக். ஆனால், காத்திருந்து காத்திருந்து காலம் போனதுதான் மிச்சம். வாய்ப்பு கிடைத்தபாடில்லை.
இதனால் வெறுத்துப்போன அபிஷேக், கிருஷ்ணாவிடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டார். ஆனால், பணத்தைக் கேட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அவர் மிரட்டப்பட்டார்.
இந்த விவரமெல்லாம் அபிஷேக் காவல்துறையிடம் அளித்த புகாரில் இடம்பெற்றுள்ளன.
அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணாமீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, இணையக் குற்றத்தடுப்புப் பிரிவுடன் இணைந்து அவரைத் தேடி வருகிறது.