உலகளவில் சமூக ஊடகங்களில் அதிகமானோரால் பின்தொடரப்படும் மூன்றாவது விளையாட்டாளரான இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிக்குச் சிங்கப்பூரில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடந்துவரும் நிலையில், கோஹ்லிக்குச் சிலை வைக்கப்பட்டிருப்பது சிங்கப்பூரிலுள்ள கிரிக்கெட் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செந்தோசாவிலுள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் கோஹ்லியின் முழு உருவ மெழுகுச் சிலை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
தேர்ந்த கலைஞர்களின் கடும் உழைப்பினால் உருவாகியுள்ள இச்சிலை, கோஹ்லி ரசிகர்களையும் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவரும் என்பதில் ஐயமில்லை.
இதுகுறித்துக் கருத்துரைத்துள்ள கோஹ்லி, “நம்ப முடியாத வகையில் என் உருவச் சிலையை வடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு உளமாரப் பாராட்டுகிறேன். இந்த வாழ்நாள் அனுபவத்திற்கு என்னைத் தேர்வுசெய்தமைக்காக மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
கோஹ்லியின் முழு உருவச் சிலையை முதன்முதலாகக் காணும் வாய்ப்பு, சிங்கப்பூர் கிரிக்கெட் சங்க உறுப்பினர்களுக்கும் விளையாட்டாளர்களுக்கும் கோஹ்லியின் ரசிகர்களுக்கும் கிட்டியது.
“சிங்கப்பூரில் கிரிக்கெட் சகாப்தம் கோஹ்லியின் சிலை திறப்பு நிகழ்வில் நாங்களும் இடம்பெற்றது பெருமகிழ்ச்சி தருகிறது. வலிமை, திறமை என அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற சின்னமாக கோஹ்லி விளங்குகிறார்,” என்று சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர் மஹ்மூத் கஸ்னாவி கூறினார்.
“கண்ணைக் கவர்கிறார் கோஹ்லி! அவரது சிலையை என் வீட்டிற்குக் கொண்டுசெல்ல விரும்புகிறேன்,” என்று சொன்னார் கோஹ்லியின் ரசிகரான மிஸ்ரா.