லண்டன்: இருவார இடைவெளிக்குப் பிறகு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
சனிக்கிழமை (அக்டோபர் 18) இரவு மான்செஸ்டர் சிட்டி, செல்சி, நியூகாசல் யுனைடெட் உள்ளிட்ட முன்னணிக் குழுக்கள் விளையாடின.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) இரவு இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.
முதல் ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவும் ஆஸ்டன் வில்லா குழுவும் மோதுகின்றன. சிங்கப்பூர் நேரப்படி ஆட்டம் இரவு 9 மணிக்குத் தொடங்குகிறது.
ஸ்பர்ஸ் குழு இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடி நான்கில் வெற்றிபெற்றுள்ளது. வில்லா ஏழு ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றுத் திணறி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கும் மற்றோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் லிவர்பூல் குழுவும் மோதுகின்றன.
சிங்கப்பூர் நேரப்படி இரவு 11:30 மணிக்கு ஆட்டம் தொடங்கவுள்ளது.
இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள லிவர்பூல் குழு ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது; இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற இலக்குடன் அது களமிறங்கக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
யுனைடெட் குழு இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் மூன்றில் வெற்றி, மூன்றில் தோல்வி, ஒரு சமநிலை என அது தவித்து வருகிறது. அதனால், இந்த ஆட்டத்தில் வெற்றிபெற அது கடுமையாக முயலக்கூடும்
சனிக்கிழமை மாலை நிலவரப்படி இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் ஆர்சனல் முதலிடத்தில் உள்ளது. நடப்பு வெற்றியாளரான லிவர்பூல் 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.