மெஸ்ஸி: கிண்ணமே என்னை அழைத்தது

மெஸ்ஸி: கிண்ணமே என்னை அழைத்தது

2 mins read
ec190a12-e09a-4a70-b331-dd3a8f547e01
மின்னொளியில் பொன்னொளி சிந்தும் உலகக் கிண்ணத்தைக் கண்டதும் தயங்காமல் அதனை முத்தமிடும் லயனல் மெஸ்ஸி. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

பியூனஸ் அய்ரஸ்: ஒளி சிந்தும் உலகக் கிண்ணத்தை உயர்த்திப் பிடிக்க அக்கிண்ணமே தன்னைத் தேர்வுசெய்ததாகக் கூறியுள்ளார் லயனல் மெஸ்ஸி.

சென்ற ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 35 வயது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வாகை சூடியது.

பிரான்சுக்கு எதிரான இறுதியாட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தபோதும் பெனால்டி வாய்ப்புகளில் அர்ஜெண்டினா வெற்றிபெற்றது.

இந்நிலையில், "வா, என்னைப் பற்றிக்கொள், இப்போது நீ என்னைத் தொடலாம் என்று கிண்ணம் என்னை அழைத்துச் சொன்னது," என்று அர்ஜென்டினாவின் 'அர்பனா பிளே' வானொலிக்கு அளித்த நேர்காணலின்போது மெஸ்ஸி கூறினார்.

தோஹாவின் அழகான லுசெய்ல் விளையாட்டரங்கில் அக்கிண்ணம் மின்னியதைத் தான் கண்டதாகக் குறிப்பிட்ட அவர், அதை முத்தமிடத் தயங்கவில்லை என்றார்.

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தமட்டில், மெஸ்ஸியின் ஐந்தாவது முயற்சியிலேயே அக்கிண்ணம் அவரது கைசேர்ந்தது. 2014ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் இறுதியாட்டத்தில் ஜெர்மனியிடம் தோல்வியைத் தழுவியது அர்ஜென்டினா.

"மிகுந்த வலிக்குப் பின்னரும் இறுதியாட்டத்தில் தோற்ற பிறகும், இறைவன் எனக்காக அதை வைத்திருந்தார்," என்றார் மெஸ்ஸி.

1986ஆம் ஆண்டில் டியேகோ மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக் கிண்ணம் வென்றிருந்த நிலையில், 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அக்கிண்ணம் அர்ஜென்டினா வசமானது.

"மரடோனா கையால் கிண்ணம் வாங்க விரும்பினேன். அது நிகழ்ந்திருந்தால், அர்ஜென்டினா வெற்றியாளராக வாகை சூடியதை அவர் கண்டிருக்க முடியும்," என்றார் மெஸ்ஸி.

ஆயினும், மேலிருந்து அவரும் தம்மை மிகவும் நேசிப்பவர்களும் தமக்கு வலிமை அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

View post on Instagram