அர்ஜென்டின காற்பந்து அணி கத்தாரில் உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அதன் தலைவர் லயனல் மெஸ்ஸி மற்றொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
கரீபியத் தீவான கியூரசாவுக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தில் அர்ஜென்டினாவுக்காக அவர் 100வது கோலைப் போட்டார்.
இந்த ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டின அணி அசைக்க முடியாத வெற்றியைப் பெற்றது. இதில் மெஸ்ஸி மூன்று கோல்களை அடுத்தடுத்து போட்டார்.
மெஸ்ஸி முதல் கோலைப் போட்டபோது அனைத்துலக அரங்கில் 100வது கோல் சாதனையைத் தொட்டார்.
அனைத்துலகப் போட்டிகளில் 100 கோல்களை போட்ட மூன்றாவது வீரர் மெஸ்ஸி. போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 122 கோல்களைப் போட்டு முதலிடத்தில் உள்ளார். ஈரானைச் சேர்ந்த அலி டேயி 109 கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.