புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 28 வயது விளம்பரப்பட அழகி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தான்யா சிங் என்ற அந்த இளம்பெண்ணின் மரணம் தொடர்பில், இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் அபிஷேக் சர்மாவைக் காவல்துறை விசாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள தன் வீட்டில் தான்யா உயிரை மாய்த்துக்கொண்டார். கடந்த திங்கட்கிழமை காலையில் தான்யாவை எழுப்பச் சென்றபோது, அவர் தூக்கில் தொங்கியபடி இருந்ததைக் கண்டு அவருடைய தந்தை அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில், “தான்யாவுடன் அபிஷேக் நட்பில் இருந்தது தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பிறகே கூடுதல் விவரம் தெரியவரும்,” என்று காவல்துறை உதவி ஆணையர் வி.ஆர்.மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.
தான்யா வாட்ஸ்அப் வழியாக அபிஷேக்கிற்குக் குறுஞ்செய்தி அனுப்பியதையும் அதற்கு அபிஷேக் பதிலளிக்காததையும் காவல்துறை கண்டுபிடித்தது.
தான்யாவின் மரணம் தொடர்பில் காவல்துறை இதுவரை அபிஷேக்கைத் தொடர்புகொள்ளவில்லை. ஆயினும், தான்யாவுடனான நட்பு தொடர்பில் விளக்கம் கேட்டு அவருக்குக் கடிதம் அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனிடையே, தான்யாவின் கைப்பேசி எண்ணை அபிஷேக் தனது கைப்பேசியில் முடக்கி வைத்திருந்தார் என்றும் சமூக ஊடகங்கள் வழியாக தான்யா அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவித்தது.