கொழும்பு: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள விளையாட்டு மன்ற அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், போட்டியின் இரண்டாம் நாளான சனிக்கிழமை (பிப்ரவரி 3) யாரும் எதிர்பாராத வகையில் அழையா விருந்தாளி ஒருவர் திடலுக்குள் புகுந்தார்.
கிட்டத்தட்ட இரண்டடி நீளம் கொண்ட ‘உடும்பு’தான் அது!
இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை ஆடியபோது, 48வது ஓவரில் உடம்பு திடலுக்குள் புகுந்தது. இந்தத் ‘திடீர் விருந்தாளி’ பெரிய திரையிலும் காட்டப்பட்டார்.
இதனையடுத்து, அந்த உடும்பு திடலைவிட்டு வெளியேறும் வரையிலும் ஆட்டம் சற்று நேரம் நிறுத்தப்பட்டது.
கிரிக்கெட் திடலில் காணக் கிடைத்த அரிய காட்சிகளில் இதுவும் ஒன்று.
முன்னதாக, 2023 ஆகஸ்ட் மாதம் காலி டைட்டன்ஸ் - தம்புல்ல ஓரா அணிகள் கொழும்பு கிரிக்கெட் அரங்கில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று புகுந்தது நினைவுகூரத்தக்கது.