புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்புக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு கடந்துவிட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) 3,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் முன்னிலை வகிப்பதாகச் சொல்லப்படும் வேளையில் நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர், அமித் ஷா போன்ற அரசியல், விளையாட்டுப் பிரபலங்களின் பெயர்களிலும் பிசிசிஐக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் பெயர்களைக் கொண்டு இந்திய அணியின் பயிற்றுநர் பதவிக்குப் பலரும் விண்ணப்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
விரைவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வரும். அதையடுத்து, அணிக்குப் புதிய தலைமைப் பயிற்றுநரை பிசிசிஐ நியமிக்கும். எனினும், டிராவிட்டுக்கு அடுத்து யார் அப்பொறுப்பை ஏற்பார் என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை இல்லை.

