சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டி.நடராஜன், தான் பிறந்த ஊரான தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் தமது சொந்த கிரிக்கெட் அரங்கத்தைத் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இம்மாதம் 23ஆம் தேதி இடம்பெறவுள்ள ‘நடராஜன் கிரிக்கெட் அரங்க’ திறப்புவிழாவின் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்கிறார் இன்னொரு இந்திய ஆட்டக்காரரான தினேஷ் கார்த்திக்.
நடிகர் யோகிபாபு, தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவர் தெய்வ சிகாமணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கிரிக்கெட் அரங்க திறப்புவிழாவில் பங்கேற்கின்றனர்.
இதன்மூலம் தமது கனவு நனவாகியிருப்பதாக டுவிட்டர் வழியாக நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள், நான்கு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் 32 வயதான நடராஜன். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.