ஆம்ஸ்டர்டாம்: அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.
திங்கட்கிழமையன்று (நவம்பர் 17) ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் லித்துவேனியாவை அது 4-0 எனும் கோல் கணக்கில் புரட்டிப் போட்டது.
இதன்மூலம் ‘சி’ பிரிவில் நெதர்லாந்து முதலிடம் பிடித்து உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றது.
ஆட்டம் முழுவதும் அது ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்தது.
‘சி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த போலந்தைவிட அது மூன்று புள்ளிகள் அதிகம் பெற்றது.
தகுதிச் சுற்றில், ஓர் ஆட்டத்தில்கூட தோல்வி அடையாத நெதர்லாந்து மொத்தம் 20 புள்ளிகளைப் பெற்றது.
மால்ட்டாவை 3-2 எனும் கோல் கணக்கில் வீழ்த்திய போலந்து மொத்தம் 17 புள்ளிகளைப் பெற்றது.
உலகக் கிண்ண காற்பந்துப் போட்டி வரலாற்றில், நெதர்லாந்து மூன்று முறை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆனால் ஒருமுறைகூட அது கிண்ணத்தை ஏந்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

