பாரிஸ்: இவ்வாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கைக்குழந்தைகளுக்கும் தனி இருக்கைக்கான நுழைவுச்சீட்டு வைத்திருக்க வேண்டும். இல்லையேல், குழந்தைகளைப் பெற்றோர்கள் தங்களுடன் தூக்கிச் செல்ல முடியாது.
ஒலிம்பிக்கில் சீருடற்பயிற்சிப் போட்டிகளைக் காண கடந்த 2023ஆம் ஆண்டிலேயே நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டார் தாதியான மஹ்கோ கிடிங்ஸ், 33. இடைப்பட்ட காலத்தில் கருவுற்று, இப்போது ஒரு குழந்தைக்கும் அவர் தாயாகிவிட்டார்.
“என் மகளுக்குப் பாலூட்டி வருகிறேன். ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்போது அவளுக்கு ஐந்து மாதங்களே ஆகியிருக்கும். அவரை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படிப் போட்டிகளைக் காணச் செல்வது?” என்கிறார் கிடிங்ஸ்.
அதேபோல, லண்டனைச் சேர்ந்த டாம் பேக்கரின் மனைவி கேட்டிற்கு வரும் மே மாதத்தில் குழந்தை பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டனர்.
இந்நிலையில், “பிறந்த குழந்தை என்றாலும் நுழைவுச்சீட்டு வேண்டும் என்று சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை,” என்று ஆதங்கப்பட்டார் டாம்.
நுழைவுச்சீட்டு வாங்கியபின் தம் மனைவி கருவுறுவார் என்பது தங்களுக்குத் தெரியாது எனக் கூறிய அவர், இப்போது நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்று முடிந்துவிட்டதால் செய்வதறியாது தவிக்கிறார்.
ஆனாலும், கைக்குழந்தை என்றாலும் தனி நுழைவுச்சீட்டு தேவை என்ற தன் முடிவில் பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு உறுதியாக இருக்கிறது. முன்னதாக, நுழைவுச்சீட்டுக் கட்டணம் தொடர்பிலும் அது விமர்சனங்களை எதிர்கொண்டது நினைவுகூரத்தக்கது.
“பொதுவாக, போட்டியைக் காண நான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பெற்றோர்கள் தங்களுடன் அழைத்து வருவதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை,” என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போதும் முதலில் இத்தகைய விதிமுறை அறிவிக்கப்பட்டது. ஆயினும், பொதுமக்களின் எதிர்ப்பால் பின்னர் அது மீட்டுக்கொள்ளப்பட்டது.
அப்படியொரு திருப்பம் இம்முறையும் நிகழும் என நம்புகிறார் பெல்ஜியத்தைச் சேர்ந்த சமூக ஆர்வல் ஏட்ரியன் பால்.
கருவுற்றுள்ள அவருடைய மனைவிக்கு ஜூன் மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், “புதிய விதி பெண்களுக்கு எதிரானதாகவும் பாகுபாட்டுடனும் உள்ளது,” என்றார் ஏட்ரியன்.