முழங்கால் காயம் காரணமாக நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார் நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன்.
இவ்வாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
அதில் சென்னை அணி முதலில் பந்தடித்தது. அப்போது, குஜராத் அணிக்காக எல்லைக் கோட்டருகே நின்றபடி களக்காப்பில் ஈடுபட்ட வில்லியம்சன் சிக்சரைத் தடுக்க முயன்றபோது விழுந்து காயமடைந்தார். அதனால், அவர் போட்டியின் பாதியிலேயே வெளியேற வேண்டியதாயிற்று.
இந்நிலையில், வில்லியம்சனுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தீவிரத்தன்மை குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் இவ்வாண்டு அக்டோபரில் நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவரால் விளையாட முடியுமா இல்லையா என்பதை இப்போதே சொல்ல முடியாது என்றும் நியூசிலாந்துப் பயிற்றுவிப்பாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார்.
இதனிடையே, வில்லியம்சன் அடுத்த வாரம் தாய்நாடு திரும்புவார் என்றும் அங்கு அவர் மருத்துவ வல்லுநர்களைச் சந்தித்து, சிகிச்சை பெறுவார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.