இவ்வாண்டிற்கான இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகள் வரும் 31ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன.
இவ்வேளையில், அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகில் காயமடைந்தது கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவரால் குறைந்தது பாதிப் போட்டிகளில் விளையாட முடியாது எனச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, கோல்கத்தா அணியின் புதிய தலைவர் தொடர்பில் கடந்த சில நாள்களாகவே ஊகச் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
இந்நிலையில், அவ்வணியின் இடைக்காலத் தலைவராக நிதீஷ் ராணா அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பருவத்தில் கோல்கத்தா அணியில் ஆக அதிக ஓட்டம் எடுத்தோர் பட்டியலில் 361 ஓட்டங்களுடன் இரண்டாமிடம் பிடித்தார் ராணா.
இப்பருவத்தில் கோல்கத்தா அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சந்திரகாந்த் பண்டிட்டும் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக பரத் அருணும் செயல்படுவர்.
கோல்கத்தா அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடும்.