ஹைதராபாத்: இந்தியாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்கவிருக்கிறது.
அதற்கு ஆயத்தமாகும் வகையில், அதற்கு முன்னதாக சில பயிற்சிப் போட்டிகள் இடம்பெறுகின்றன.
அவ்வகையில், பாகிஸ்தான் அணி 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெறும் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதவுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அப்போட்டி மூடிய அரங்கில் இடம்பெறும் என்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. அப்போட்டியைக் காண நுழைவுச்சீட்டு வாங்கியோருக்குப் பணம் திருப்பித் தரப்படும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.
அக்டோபர் 3ஆம் தேதி நடக்கவுள்ள இன்னொரு பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை எதிர்த்தாடும். அதற்கு மூன்று நாள்களுக்குப் பின், உலகக் கிண்ணத் தொடரில் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் பாகிஸ்தான் மோதும்.
இதனிடையே, பாகிஸ்தான் அணியினர்க்கு விசா வழங்குவது தாமதமான நிலையில், திங்கட்கிழமையன்று அவர்களுக்கு விசா வழங்கப்பட்டுவிட்டது. அவர்கள் புதன்கிழமை துபாய் வழியாக இந்தியா செல்வர் என்று தெரிவிக்கப்பட்டது.