மியூனிக்: நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டி கிண்ணத்தை போர்ச்சுல் வென்றுள்ளது.
இப்போட்டியில் போர்ச்சுகல் வாகை சூடியிருப்பது இதுவே இரண்டாவது முறை.
ஜெர்மனியின் மியூனிக் நகரில் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெற்றது.
இதில் போர்ச்சுகலும் ஸ்பெயினும் மோதின.
ஆட்டத்தின்போது ஸ்பெயின் இருமுறை முன்னிலை வகித்தது.
இருப்பினும், மனந்தளராது போராடிய போர்ச்சுகல் ஆட்டத்தைச் சமப்படுத்தியது.
ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் மார்ட்டின் ஸுபிமெண்டி ஸ்பெயினின் முதல் கோலைப் போட்டார்.
ஆனால், சிறிது நேரத்திலேயே போர்ச்சுகல் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.
தொடர்புடைய செய்திகள்
பெட்ரோ நேட்டோ போர்ச்சுகலின் முதல் கோலைப் போட்டார்.
இடைவேளைக்கு முன்பு ஸ்பெயினின் மிக்கேல் ஒயார்ஸபால் கோல் போட்டு தமது அணியை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
பிற்பாதி ஆட்டத்தில், போர்ச்சுகலின் நட்சத்திர வீரரான 40 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினின் தற்காப்பு ஆட்டக்காரர்களை ஓரங்கட்டி பந்தை வலைக்குள் அனுப்பி ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.
ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் முடிந்தது.
வெற்றியாளரை நிர்ணயிப்பதற்தாக நடத்தப்பட்ட பெனால்டி ஷுட்அவுட்டில் 5-3 எனும் கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது.
போர்ச்சுகலின் வெற்றிக்கு ரொனால்டோ முக்கிய காரணம் என்று அக்குழுவின் பயிற்றுவிப்பாளரும் ஆட்டக்காரர்களும் ஒருசேரப் பாராட்டினர்.
மூன்றாவது இடத்தை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் பிரான்சும் போட்டியை ஏற்று நடத்தும் ஜெர்மனியும் மோதின.
இதில் பிரான்ஸ் 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பிரெஞ்சு அணித் தலைவர் கிலியன் எம்பாப்பே, மைக்கல் ஒலிஸ் கோல்களைப் போட்டனர்.
ஜெர்மனியின் கோல்காப்பாளர் மட்டும் விழிப்புடன் இருந்திருக்காவிடில் பிரான்ஸ் கூடுதல் கோல்களைப் போட்டிருக்கும்.