ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லோம்போக் தீவில் ரஃபா நடால் டென்னிஸ் பயிற்சிக் கழகம் 2028ஆம் ஆண்டில் தொடங்கப்படவுள்ளது. இதுவே தென்கிழக்காசியாவில் அமைக்கப்படும் ஓய்வுபெற்ற டென்னிஸ் நட்சத்திரமான ஸ்பெயினின் ரஃபா நடாலின் முதல் டென்னிஸ் பயிற்சிக் கழகமாகும்.
‘சமாரா லோம்போக்’ என்ற சொகுசு உல்லாசத் தளத்தில் அமையவுள்ள இம்மையத்தில், நான்கு டென்னிஸ் மைதானங்களும் நான்கு பேடல் மைதானங்களும் இடம்பெறும்.
நடால் மற்றும் அவரது தொழில்நுட்பக் குழுவினரின் பயிற்சி முறைகளைப் பின்பற்றி, அனைத்து வயதினருக்கும் திறன்களுக்கும் ஏற்ற விளையாட்டுத் திட்டங்கள் இங்கு வழங்கப்படும்.
“தென்கிழக்காசியாவின் முதல் ரவால் நடால் டென்னிஸ் பயிற்சிக் கழகம் லோம்போக்கில் அமைவது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். அனைத்துலக அளவில் பெரும் ஆற்றல் கொண்ட லோம்போக் தீவு, புதிய தலைமுறை ஆட்டக்காரர்களுக்கு எங்களது பயிற்சி முறையையும் விளையாட்டு ஆர்வத்தையும் கொண்டு சேர்க்க உதவும்” என்று ரஃபா நடால் பயிற்சிக் கழகத்தின் துணைத் தலைமை மேலாளரும் நடாலின் சகோதரியுமான மாரிபெல் நடால் கூறினார்.
2016ஆம் ஆண்டில் ஸ்பெயினில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சிக் கழகம், மெக்சிகோ, குவைத், ஹாங்காங் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வருகிறது. நோர்வேயின் கேஸ்பர் ரூட், ஃபிலிப்பீன்சின் அலெக்சாண்டிரா ஈலா ஆகியோர் இதன் குறிப்பிடத்தக்க முன்னாள் பயிற்சி ஆட்டக்காரர்கள் ஆவர். தென்கிழக்காசியாவிலேயே இந்த மையம் அமைவது குறித்து சிங்கப்பூர் டென்னிஸ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் தெரிவித்துள்ளனர்.



