நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்காக தனக்குக் கிடைத்த தொகையில் 25 விழுக்காட்டை அபராதமாகச் செலுத்தும்படி இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவிற்கு அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது.
போட்டியின்போது கள நடுவர்களிடம் தெரிவிக்காமல் தமது ஆட்காட்டி விரலில் வலிநீக்கி மருந்தை அவர் தடவியதே இதற்குக் காரணம்.
அந்த ஆட்டத்தில் இந்திய அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டி மூன்று நாள்களுக்குள்ளாகவே முடிவிற்கு வந்தது.
மொத்தம் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 70 ஓட்டங்களையும் குவித்த ஜடேஜாவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
மொத்தம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது ஆட்டம் வரும் 17ஆம் தேதி டெல்லியில் தொடங்கவிருக்கிறது.


