இந்திய கிரிக்கெட் விளையாட்டரங்குகளில் தவிர்க்க முடியாத மற்றும் பழமையான விளையாட்டரங்குகளில் ஒன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் விளையாட்டரங்கம்.
அது தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
விளையாட்டரங்கம் மார்ச் 17ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், மாநிலத்தின் இளையர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் திறந்து வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
1916ஆம் ஆண்டு கட்டப்பட்ட சேப்பாக்கம் விளையாட்டரங்கம் 2011ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக மறுசீரமைப்பு செய்யப்பட்டிருந்தது.
தற்போது விளையாட்டரங்கில் முக்கியமான பழைய நினைவுகளைக் கூறும் அருங்காட்சியகம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அருங்காட்சியகம் போன்றவை கட்டப்பட்டுள்ளன.
புதிய அரங்கில் கிட்டத்தட்ட 39,000 ரசிகர்கள் ஆட்டத்தைக் கண்டுகளிக்கலாம்.
சேப்பாக்கத்தில் மார்ச் 22ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 50 ஓவர் ஆட்டத்தில் மோதுகின்றன.
அதன் பின்னர் ஐபில் ஆட்டங்களும் அங்கு நடக்கவுள்ளன.