கிரிக்கெட் விளையாட்டில் திறமைமிகு பந்தடிப்பாளர்கள்கூட கடைசி ஐந்து பந்துகளில் ஐந்து சிக்சர்கள் அடிப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.
ஆனால், ரிங்கு சிங் ஞாயிற்றுக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடித்து எட்ட முடியாத வெற்றியை எட்டிப்பிடித்தார்.
வறுமையான சூழலிலும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று அயராது உழைத்த ரிங்குவின் உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான் அந்த ஐந்து சிக்சர்கள் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் ரிங்கு சிங். உத்தரப் பிரதேசத்தில் அவரின் தந்தை எரிபொருள் விநியோகம் செய்யும் ஓட்டுநர்.
2015-2016 காலகட்டத்தில் உத்தரப் பிரதேச அணியின் 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் விளையாடினார் ரிங்கு சிங். கடன் சுமையில் இருந்த குடும்பத்தினரிடம் பணம் கேட்காமல் தரையைக் கழுவுவது, துடைப்பது போன்ற கூலி வேலைகளில் ஈடுபட்டார் அவர்.
ரிங்குவின் திறமையைக் கண்ட ஐபிஎல் அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க, வறுமையில் இருந்து அவரது குடும்பம் மீண்டது. சிறிய தொகைக்கு ஏலம் போனாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் ரிங்கு சிங் தொடர்ந்து விளையாடினார்.
“என் தந்தை விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர், அவர் பல துயரங்களைச் சந்தித்துள்ளார். நான் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக பல தியாகங்களை செய்த என் குடும்பத்தினருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்” என்று ரிங்கு சிங் கூறினார்.
கடைசி ஓவரில் 29 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரிங்கு சிங் தொடர்ந்து ஐந்து சிக்சர்கள் அடித்து கோல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்தார்.
அதிரடியாக ஆடிய ரிங்கு சிங் 21 பந்தில் 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.