இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக உயர்ந்துள்ளபோதும் சிறுவயதில் கிரிக்கெட் சார்ந்த பொருள்களை வாங்க மிகுந்த சிரமப்பட்டார் ரோகித் சர்மா.
முன்னாள் இந்திய வீரரும் இப்போதைய ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினருமான பிரக்யான் ஓஜா இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
சிறுவயது முதலே ரோகித்தும் ஓஜாவும் இணைந்து விளையாடி வந்துள்ளனர். 15 வயதிற்குட்பட்ட இந்திய அணியில் முதலில் அறிமுகமாகி, பின்னர் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணி, தேசிய அணி, ஐபிஎல்லில் டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் என்று இருவரின் பயணமும் பல ஆண்டுகளாக ஒன்றாகத் தொடர்ந்தது.
சிறுவயதிலேயே ரோகித் அபாரத் திறன் கொண்டவராக அறியப்பட்டதாக ஓஜா குறிப்பிட்டார்.
"ரோகித் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் 'கிரிக்கெட் கிட்' வாங்கப் பணமின்றிச் சிரமப்பட்டதைப் பகிர்ந்துகொண்டபோது அவர் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டார். உண்மையில், அதற்காக அவர் பால் பாக்கெட்கூடப் போட்டுள்ளார். இப்போது அவரைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது," என்றார் ஓஜா.
கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ரோகித், சென்ற ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூவகைப் போட்டிகளுக்கும் இந்திய அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.
2022ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமையேற்று வழிநடத்தினார் ரோகித்.
இந்நிலையில், இவ்வண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சொந்த நாட்டில் நடக்கவுள்ள உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அவர் தலைமையில் களமிறங்கவுள்ளது.


