துபாய்: பிரெஞ்சுக் காற்பந்து லீக் போட்டிகளைக் காட்டிலும் சவூதி புரோ லீக் போட்டித்தன்மைமிக்கது என்று உலகின் முன்னணி ஆட்டக்காரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
“உண்மையாகச் சொல்வதெனில், பிரெஞ்சு லீக் அளவிற்கு சவூதி லீக் மோசமில்லை. அது போட்டித்தன்மைமிக்கது என நினைக்கிறேன்,” என்றார் ஐந்து முறை உலகின் சிறந்த காற்பந்து வீரர் விருதை வென்ற ரொனால்டோ.
கடந்த ஓராண்டாக சவூதியில் விளையாடி வருவதன் அடிப்படையிலேயே தாம் இதனைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
துபாயில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) நடந்த காற்பந்து விருது விழாவின்போது ரொனால்டோ இவ்வாறு சொன்னார்.
முதன்முதலில் சவூதி லீக்கிற்கு இடமாறிய முன்னணி ஆட்டக்காரர் ரொனால்டோதான். கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் அல் நசர் குழுவுடன் அவர் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து, பிரான்சின் கரிம் பென்சிமா, பிரேசிலின் நெய்மார், செனகல் நாட்டின் சாடியோ மனே உள்ளிட்ட முன்னணி வீரர்களும் ஐரோப்பியக் குழுக்களை விட்டு சவூதி லீக்கிற்கு மாறினர்.
சவூதி லீக்கில் விளையாட அதிகமான பணம் வழங்கப்படுவதே இதற்கு முதன்மைக் காரணமெனக் கூறப்படுகிறது.