ஐபிஎல் என்னும் இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளுக்கு நாள் பந்தடிப்பாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
வெள்ளிக்கிழமை (மே 12) இரவு நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
ஆட்டம் மும்பையின் வான்கடே விளையாட்டரங்கில் நடந்தது.
முதலில் பந்தடித்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்கள் குவித்தது.
சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 103 ஓட்டங்கள் குவித்தார். திடலின் எல்லா பக்கங்களிலும் ஓட்டத்தை குவித்த அவர் 11 நான்கு ஓட்டங்களையும் 6 சிக்சர்களையும் விளாசினார்.
ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தையும் சூர்யகுமார் நேற்று பதிவுசெய்தார்.
இமாலய இலக்கை விரட்டிய குஜராத் அணிக்குத் தொடக்கம் முதலே சரிவு தான். 7.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 55 ஓட்டங்களே அது எடுத்திருந்தது.
அந்த அணி 12 ஓவர் முடிவில் 100 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய ரஷித் கான், 32 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார். 10 சிக்சர்கள் அடித்து அரங்கத்தை அதிரவைத்தார் அவர்.
இன்னும் சில பந்துகள் இருந்திருந்தால் ரஷித் கான் குஜராத்தை வெற்றிக்கு அழைத்து சென்றிருப்பார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்து 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.