மும்பை: இந்திய கிரிக்கெட் சகாப்தம் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே விளையாட்டரங்கில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அச்சிலை நவம்பர் 1ஆம் தேதி புதன்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது.
சென்ற ஏப்ரல் மாதம் 50 வயதை எட்டிய சச்சினுக்கு வான்கடே அரங்கில் சிலை நிறுவப்படும் என்று இவ்வாண்டுத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
அரங்கில் பார்வையாளர்களுக்கான ‘சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட்’ அமர்விடப் பகுதிக்கு அருகிலேயே சச்சினின் முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
திறப்புவிழாவில் சச்சினுடன் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகரைச் சேர்ந்த பிரமோத் காம்ப்ளே என்ற சிற்பி இச்சிலையை வடிவமைத்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு வான்கடே அரங்கில் சச்சின் தமது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், அதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே அரங்கில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதனிடையே, உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-இலங்கை அணிகள் மோதும் போட்டி வான்கடே அரங்கில் 2ஆம் தேதி வியாழக்கிழமை நடக்கவிருக்கிறது.