புதுடெல்லி: வரும் ஜூலை மாதத்தில் ஸிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு ஐந்து டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
அவ்வணியின் தலைவராக இளம் வீரர் ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இப்போதைய அணித்தலைவரான ரோகித் சர்மா, முன்னணி ஆட்டக்காரர்கள் விராத் கோஹ்லி, ரிஷப் பன்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஐந்து போட்டிகளும் ஹராரேவில் நடைபெறும். ஜூலை 6ஆம் தேதி முதல் போட்டி நடக்கவுள்ளது. அடுத்த போட்டிகள் ஜூலை 7, 10, 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெறும்.
இவ்வாண்டு நடந்த இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரில் சாதித்த நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகிய நான்கு புதுமுகங்களுக்கு இந்திய அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மும்பையைச் சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விவரம்: ஷுப்மன் கில் (அணித்தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் காப்பாளர்), துருவ் ஜுரெல் (விக்கெட் காப்பாளர்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.