ஆசியக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றில் சிங்கப்பூர் ஹாங்காங்கைத் தோற்கடித்து, 2027ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் நடைபெறும் ஆசிய கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை ஹாங்காங்கின் கை தாக் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் ஹாங்காங் அணி தனது முதல் கோலைப் போட்டு முன்னணிக்குச் சென்றது.
சிங்கப்பூர் அணி கடுமையாக ஈடுகொடுத்து ஆடி, 64வது நிமிடத்தில் ஷவால் அனுவார் போட்ட கோல்மூலம் ஆட்டத்தைச் சமன்படுத்தியது. நான்கு நிமிடம் கழித்து இல்ஹான் ஃபாண்டி வெற்றி கோலை அடித்தார். இறுதியில் சிஙகப்பூர் 2-1 என்ற கோல் கணக்கில் வாகை சூடியது.
இதன் மூலம் ‘சி’ பிரிவில் 11 புள்ளிகள் எடுத்து, முதல் இடத்தில் உள்ளது. அதற்கு இன்னும் ஓர் ஆட்டம் எஞ்சியுள்ளது. இதுவரை ஆசியக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறாத சிங்கப்பூர் அணி, இந்த வெற்றியின் மூலம் சிங்கப்பூர் காற்பந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இவ்வாட்டத்தை உள்ளூர் காற்பந்து ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கண்டுகளித்தனர்.

