பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் வீராங்கனை குவா டிங் வென் போட்டியிடமாட்டார் என்பது ஜூலை 8ஆம் தேதி உறுதியானது.
சிங்கப்பூர் நீர் விளையாட்டு அமைப்புக்கும், உலக நீர் விளையாட்டு அமைப்புக்கும் செய்யப்பட்ட மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
31 வயது டிங் வென்னுக்குப் பதிலாக 20 வயது கன் சிங் ஹுவீ பெண்கள் 4x100 மீட்டர் பலபாணி நீச்சல் போட்டியில் கலந்துகொள்வார் என சிங்கப்பூர் நீர் விளையாட்டு அமைப்பு கூறியது.
பாரிஸ் ஒலிம்பிக்கில், சிங்கப்பூர் இப்போது ஏழு நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும்.
கடந்த சில நாள்களாக நடைபெற்ற நிகழ்வுகளால், தாம் ஏமாற்றமும் மனரீதியாக சோர்வும் அடைந்ததாக டிங் வென் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
அடுத்தக் கட்ட திட்டங்கள் குறித்து சிந்திக்க தமக்கு நேரம் இருக்கவில்லை என்றார் அவர்.
முன்னதாக பாரிஸ் விளையாட்டுகள் தாம் கலந்துகொள்ளவிருக்கும் இறுதிப் போட்டி என்று மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட டிங் வென் கூறியிருந்தார்.
“எனது வாழ்க்கைத் தொழிலை இப்படி முடித்துக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நடந்த அனைத்தையும் பற்றிச் சிந்திக்க எனக்கு நேரம் தேவை. அடுத்த ஆண்டு நான் மீண்டும் நீந்துவேனா என்று கேட்டால், எனக்குத் தெரியாது என்பதுதான் என் பதில்,” என்று டிங் வென் கூறினார்.


