கேப்டவுன்: வரும் பிப்ரவரி 4ஆம் தேதி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராகத் தொடங்கவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியைத் தென்னாப்பிரிக்கா அறிவித்து இருக்கிறது.
இதுவரை அனைத்துலக அளவில் ஒரு போட்டியில்கூட ஆடியிராத நீல் பிராண்ட் என்பவர் அவ்வணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, 1995ஆம் ஆண்டு லீ கெர்மான் என்பவர், தமது முதல் அனைத்துலகப் போட்டியிலேயே நியூசிலாந்து அணியை வழிநடத்தினார். அதன்பின், தமது முதல் போட்டியிலேயே அணிக்குத் தலைமையேற்கும் பெருமைக்கு உரியவராகிறார் 27 வயதான நீல் பிராண்ட்.
இடக்கை ஆட்டக்காரரான இவர், 51 முதல்தரப் போட்டிகளில் விளையாடி, 39.77 என்ற சராசரியுடன் 2,906 ஓட்டங்களைக் குவித்துள்ளார்; சுழல் பந்துவீச்சாளராக 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவருடன் சேர்த்து அறிமுக வீரர்களாக அறுவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி விவரம்: நீல் பிராண்ட் (அணித்தலைவர்), டேவிட் பெடிங்கம், ருவான் டி ஸ்வார்ட், கிளைட் ஃபார்ச்சூன், ஸுபைர் ஹம்சா, ஷெப்போ மொரெக்கி, மிலாலி இம்பொங்வானா, டுவேன் ஒலிவியே, டேன் பேட்டர்சன், கீகன் பீட்டர்சன், டேன் பீட், ரெனாட் வான் டோண்டர், ஷான் வோன் பெர்க், காயா ஸோண்டோ.
இதனிடையே, தென்னாப்பிரிக்க, இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 3ஆம் தேதி கேப்டவுனில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் இந்தியா தோற்றுப்போனது.