புதுடெல்லி: இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா செல்லும் தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திரப் பந்தடிப்பாளரான டெம்பா பவுமா அணித்தலைவராக மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்த தென்னாப்பிரிக்க அணியில் அவர் இடம்பெற்றிருக்கவில்லை. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 எனச் சமநிலையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சென்றிருந்த தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றிருந்த டேவிட் பெடிங்ஹம் நீக்கப்பட்டுள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14-18 தேதிகளில் கோல்கத்தாவிலும் இரண்டாவது போட்டி நவம்பர் 22-26 தேதிகளில் கௌகாத்தியிலும் நடைபெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் இடம்பெறும்.
இதற்கிடையே, இம்மாதம் 30ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியா ‘ஏ’, தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகள் கொண்ட நான்கு நாள் டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (அணித்தலைவர்), எய்டன் மார்க்ரம். டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன், டிவால்டு பிரெவிஸ், ஸுபைர் ஹம்சா, டோனி ட ஸோர்ஸி, கார்பின் பாஸ்ச், வியான் மல்டர், மார்க்கோ யான்சன், கேசவ் மகராஜ், சேனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, சைமன் ஹார்மர்.

