அட்லாண்டா: உலகக் கிண்ணக் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும் தென்கொரியாவின் நம்பிக்கை ஜூன் 27ஆம் தேதியன்று ஒரு முடிவுக்கு வந்தது.
‘கே’ பிரிவின் இறுதி ஆட்டத்தில், காங்கோ ஜனநாயகக் குடியரசு உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது, தென்கொரியாவுக்கு இறுதி அடியாக அமைந்தது.
காங்கோ, குழுச் சுற்றை ஒரு வெற்றி, ஒரு சமநிலை, ஒரு தோல்வியுடன் முடித்து, நான்கு புள்ளிகளைப் பெற்று ‘கே’ பிரிவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
இந்த முடிவு, மூன்றாவது இடத்தைப் பிடித்த அணிகளில் தென் கொரியாவை ஒன்பதாவது இடத்திற்குத் தள்ளியது. இது தகுதிபெறும் எட்டு இடங்களுக்கு வெளியே இருப்பதால், முன்னேறுவதற்கான வாய்ப்பு பறிப்போனது.
ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற ‘ஏ’ பிரிவு ஆட்டத்திற்குப் பிறகு, தென் கொரியா ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து, மூன்று புள்ளிகளைப் பெற்றது.
இதன் பொருள், செக் குடியரசுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் போட்டியைத் தொடங்கிய போதிலும், தென் கொரியாவால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் தொடர்ச்சியாக 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால், இரண்டாவது இடத்தைப் பிடித்த அணியாக 32 அணிகள் சுற்றுக்குத் தகுதிபெற முடியவில்லை.
விரிவாக்கப்பட்ட 48 அணிகள் கொண்ட போட்டி வடிவத்தின்கீழ், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தானாகவே அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதே நேரத்தில், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் சிறந்த எட்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
அதனால், தென் கொரியா மற்ற குழுக்களின் முடிவுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தகுதி பெறுவதற்கான மெல்லிய வாய்ப்பு நிலைத்திருக்கும் என்று ரசிகர்கள் நம்பினர்.
நாடு திரும்புவதற்கு முன்பு ஜூன் 29ஆம் தேதி, தென்கொரியா ஒரு நிறைவுரை செய்தியாளர் சந்திப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது என்று தி கொரியா ஹெரால்ட் தெரிவித்தது.

