பார்சிலோனா: முன்னாள் பிரேசில் காற்பந்து வீரரான டேனி ஆல்வெஸ் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கு நாலரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர் 150,000 யூரோ (S$218,000) இழப்பீடு வழங்கவும் ஸ்பானிய நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள இரவுக் கேளிக்கை விடுதி ஒன்றில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆல்வெஸ் அக்குற்றத்தைப் புரிந்தார்.
அப்பெண்ணின் ஒப்புதலுடனேயே தான் அவருடன் உறவு வைத்துக்கொண்டதாக 40 வயது ஆல்வெஸ் தொடர்ந்து கூறிவந்தார்.
ஆனால், “ஆல்வெசுடன் பாலியல் உறவுகொள்ள அப்பெண் இணங்கவில்லை என்பதும் ஆல்வெஸ் அவரை வன்புணர்வு செய்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,” என்று நீதிபதி தமது தீர்ப்பின்போது குறிப்பிட்டார்.
முன்னணி ஸ்பானியக் காற்பந்துக் குழுவான பார்சிலோனாவின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரரான ஆல்வெஸ், சென்ற ஆண்டு ஜனவரி மாதம் கைதுசெய்யப்பட்டார். அப்போதுமுதல் அவர் காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
ஆல்வெஸ் ஒரு முன்னணிக் காற்பந்து ஆட்டக்காரர் என்பதோடு மட்டுமின்றி, ஸ்பெயினில் பாலினப் பாகுபாடு குறித்து அதிகமாகப் பேசப்பட்டு வருவதாலும் இந்த வழக்கு பெரிதும் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.