கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வாவும் அதன் மற்ற உறுப்பினர்களும் ஒருசேர பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக அனைத்துலக அரங்கில் இலங்கை அணியின் செயல்பாடுகள் மோசமாக இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்தே ஷம்மி சில்வாவைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக இலங்கை அரசு பரிசீலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், சில்வா கடந்த வாரம் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகவை சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது அவரது பதவி விலகலை எதிர்பார்ப்பதாக அதிபர் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் ஷம்மி சில்வா.
கொழும்பு நகரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
ஏறக்குறைய சுமார் மூன்று மணி நேரம் நீடித்த ஆலோசனைக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் பதவியிலிருந்து மொத்தமாக விலகுவதாக அறிவிப்பு வெளியானது.
அதன் பின்னர் இடைக்கால குழு ஒன்று கிரிக்கெட் வாரிய நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்து வருகிறது.
எனினும், ஷம்மி சில்வாவின் பதவி விலகல் சர்ச்சைக்கும் வித்திட்டுள்ளது. அரசியல் தலையீடு காரணமாகவே சில்வா வாரியத் தலைவர் பதவியிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுவதை அடுத்து, அனைத்துலக கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இது தொடர்பாக எதிர் நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஏனெனில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் சில்வாவை பதவியிலிருந்து நீக்கியபோது, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பது ஐசிசி-யின் விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் தகுதியை ஐசிசி உடனடியாக ரத்து செய்தது.
அதன் பின்னர் தனக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினார் சில்வா. சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றதையடுத்து அவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார்.

