ஆன்டிகுவா: இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி அபாரமாகப் பந்தடித்து சதமடிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்களைச் சேர்த்தது. நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தொடக்கத்தில் இந்திய அணி பங்கேற்ற இரு பயிற்சிப் போட்டி களும் 'டிரா'வில் முடிந்தன.
இந்த நிலையில், இந்தியா= வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் விளையாட் டரங்கில் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதுமுக வீரராக பந்தடிப்பாளர் ரோஸ்ட்டன் சேஸ் இடம்பெற்றார். கோஹ்லி கூறியது போலவே இந்திய அணி ஐந்து பந்துவீச்சா ளர்களுடன் களமிறங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்தடித் தது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் ஏழு ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த புஜாராவும் அதிக நேரம் நிலைக்கவில்லை. 16 ஓட்டங்களுடன் திருப்தி கண்டு அவர் ஓய்வறை திரும்பினார். ஆயினும், 3வது விக்கெட் டுக்குச் சேர்ந்த ஷிகர் தவானும் கோஹ்லியும் எதிரணி வீரர் களின் பந்துகளைச் சமாளித்து ஓட்டம் குவித்தனர். இவ்விருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 105 ஓட்டங்களைச் சேர்த்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார் தவான்.
பின் கோஹ்லியுடன் இணைந் தார் அணியின் துணைத் தலைவர் அஜின்கிய ரகானே. சிறிது நேரம் தாக்குப் பிடித்த அவர் 22 ஓட்டங் களை எடுத்தநிலையில் தேவேந்திர பிஷூவின் சுழலில் சிக்கினார். அடுத்து களம்புகுந்த அஸ்வின் நிதானமாக ஆடி கோஹ்லிக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கோஹ்லி 143 ஓட்டங் களுடனும் அஸ்வின் 22 ஓட்டங் களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிஷு மூன்று விக்கெட்டுகளைக் கைப் பற்றினார்.
டெஸ்ட் போட்டிகளில் 12வது சதம் கடந்த இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, 3,000 ஓட்டங்களை எட்டிய எட்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அத்துடன், இந்திய அணியின் தலைவராக இருந்து ஆயிரம் ஓட்டங்களை எடுத்த ஒன்பதாவது வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிட்டியது. படம்: ஏஎஃப்பி

