மான்செஸ்டர்: இந்தப் பருவத்தின் முதல் அனைத்துலக இடைவேளை முடிந்து மீண்டும் விறுவிறுப்புக்குத் தயாராகிவிட்டது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் களம். இவ்வார இறுதியில் நடைபெறவிருக்கும் முதல் போட்டியே முத்தான போட்டியாக இருப்பதால் காற்பந்து ரசிகர்களுக்கு ஏகக் கொண்டாட்டம்தான். இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் வென்று இம்முறை பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்புடன் இருக்கும் மான்செஸ்டர் சிட்டியும் மான் செஸ்டர் யுனைடெட்டும் சிங்கப்பூர் நேரப் படி நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மல்லுக்கட்டுகின்றன. கடந்த சில பருவங்களாகச் சரிவைச் சந்தித்து வந்த யுனைடெட் குழு இம்முறை பெரும் பணத்தைக் கொட்டி ஸ்லாட்டன் இப்ராகிமோவிச், பால் போக்பா, எரிக் பெய்லி, ஹென்ரிக் மகிதார்யான் என நட்சத்திரப் பட்டா ளங்களை இறக்கியுள்ளது.
புதிய வீரர்களை ஒப்பந்தம் செய் வதில் சிட்டியும் சளைக்கவில்லை. ஜான் ஸ்டோன்ஸ், லெரோய் சேன், குண்டோகன், கிளாடியோ பிராவோ, கேப்ரியல் ஜீசஸ், நொலிட்டோ என மேலும் பல திறமைசாலிகள் அக்குழுவில் அடியெடுத்து வைத்துள்ளனர். இந்தப் பருவத்தில் புதிய வீரர்களுக்காக யுனைடெட் 145 மி. பவுண்டையும் சிட்டி 168 மி. பவுண்டையும் செலவிட்டுள்ளன. நாளைய ஆட்டத்தில் களமிறங்கும் இரு குழு ஆட்டக் காரர்களின் ஒட்டுமொத்த மதிப்பு கிட்டத்தட்ட 600 மி. பவுண்டாக (S$1.08 பில்லியன்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இரு குழுக்களும் பணத்தைக் கொட்டி திறமையானவர்களைத் தங்கள் பக்கம் இழுத்துள்ள நிலையில், இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் யார் சிறந்தவர் என்பதை உலகிற்கு அறிவிக்க இரு குழுக்களும் நாளை கடுமை யாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை. போதாதற்கு, திடலின் எல்லைப் பகுதியிலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஜோசே மொரின்யோ (யுனைடெட், இடது படம்)=பெப் கார்டியோலா (சிட்டி, வலது படம்) என்ற பழைய எதிரிகள் முதன்முறையாக இங்கிலிஷ் பிரிமியர் லீக்கிலும் சந்திக்கக் காத்திருக்கின்றனர். இவ்விருவரும் நிர்வாகிகளாக 16 முறை மோதியதில் கார்டியோலா ஏழு முறையும் மொரின்யோ மூன்று முறையும் வென்றுள்ளனர். மான்செஸ்டர் குழுக்களைப் பொறுத்தவரை, அவற்றுக்கு இடையிலான 172வது ஆட்டம் இது. முந்தைய 171 மோதல்களில் யுனைடெட் 71 முறையும் சிட்டி 49 முறையும் வெற்றியைத் தன்வசப்படுத்தின.
சில நாட்களுக்குமுன் நடந்த 21 வயதுக்குட்பட்டோ ருக்கான ஆட்டத்தில் நார்வேக்கு எதிராக இங்கிலாந்தின் 18 வயது மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் ஹாட்ரிக் கோலடித்திருந்தார். இப்படி உச்சத்தில் இருந்தாலும் நாளைய ஆட்டத்தில் யுனைடெட் சார்பில் களமிறங்கும் முதல் பதினொருவரில் ரேஷ்ஃபர்டுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே கருதப்படுகிறது. பதிலாக, அனுபவ வீரர் இப்ராகிமோவிச்சையே மொரின்யோ களமிறக்குவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இதுவரை நடந்த ஆட்டங்களில் மூன்று கோல்களை அடித்திருப்பதும் அவருக்குச் சாதகமான அம்சம்.
சிட்டியின் நட்சத்திர ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோ மூன்று ஆட்டங் களுக்குத் தடை பெற்றுள்ளதால் நாளைய ஆட் டத்தில் அவரால் களமிறங்க இயலாது. அதே நேரத்தில், கோல்காப்பாளர் பிராவோவிற்கு இன்றைய ஆட்டம் சிட்டி சார்பில் அவர் பங்கேற்கும் முதல் ஆட்டமாக அமையக்கூடும்.

