594 ஓட்டங்கள் குவித்த இந்திய இணை

594 ஓட்டங்கள் குவித்த இந்திய இணை

1 mins read

மும்பை: இன்னும் முப்பது ஓட்டங்கள் எடுத்திருந்தால் இலங்கை முன்னாள் வீரர்கள் மகேலா ஜெயவர்தனே=குமார் சங்ககாரா இணையின் உலக சாதனையை எட்டியிருக்க முடியும். அதற்கேதுவாக இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தபோதும் அச்சாதனை குறித்து அறிந்து இருக்காததால் நல்ல வாய்ப்பை போய்விட்டதே என புலம்பித் தள்ளினர் மகாராஷ்டிர மாநில கிரிக்கெட் வீரர்களான சுவப்னில் குகலேவும் அங்கீத் பாவ்னேவும். டெல்லி அணிக்கு எதிராக மும்பையில் நடந்துவரும் போட்டியில் இவ்விருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 594 ஓட்டங்களைச் சேர்த்ததே ரஞ்சி கிண்ண வரலாற்றில் எந்த விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள்.

சுவப்னில் 351 ஓட்டங்களும் அங்கீத் 258 ஓட்டங்களும் எடுத்திருந்தபோது மகாராஷ்டிர அணி தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. ஓய்வறைக்கு வந்த பின்னரே சாதனையைத் தவறவிட்டதை அவர்கள் அறிந்தனர். 2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக கொழும்பில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஜெயவர்தனேவும் சங்ககாராவும் சேர்ந்து எடுத்த 624 ஓட்டங்களே முதல் தரப் போட்டிகளில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டம்.