பெல்கிரேட்: உலகின் முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச், 29 (படம்), டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் செர்பிய வீராங்கனை அனாதான். 2008 பிரெஞ்சு ஓப்பன் இறுதிப் போட்டி யில் ரஷ்யாவின் டினாரா சஃபினாவை வீழ்த்தி இவர் பட்டம் வென்றார். அதனுடன் சேர்த்து இவர் 15 ஒற்றையர் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளார். அதன்பின் தமது உச்ச ஆட்டத் திறனை இழந்த இவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.
முதல்நிலை டென்னிஸ் போட்டிகளில் விளையாடும் உடற்தகுதியை இழந்துவிட்டதாகக் கருதுவதால் டென்னிசில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு இவர் வந்துவிட்டார். "ஐந்து வயது முதலே டென்னிசில் சாதிக்கவேண்டும் என்று கனவு காணத் தொடங்கினேன். 2008ல் பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை வென்று, உலகத் தர வரிசையிலும் முதல்நிலையைப் பிடித் தேன். கனவிலும் நினைக்காத உச்சத்தை நான் எட்டிவிட்டேன்," என்றார் அனா.