போர்ன்மத்: ஆட்டம் ஒரு மணி நேரத்தைக் கடந்தும் மூன்று கோல்கள் பின்னிலையில் இருந்ததால் தோல்வி நிச்சயம் என்ற நிலையில் இருந்து, ஆட்டத்தைச் சமன்செய்து காற்பந்து உலகை ஆச்சரியப்பட வைத்தது ஆர்சனல். இங்கிலிஷ் பிரிமியர் லீக் வரலாற்றில் இப்படி மூன்று கோல்கள் பின்தங்கியிருந்து மீண்டு வந்தது ஆர்சனல் குழுவைப் பொறுத்த மட்டில் இதுவே முதன்முறை. தமது குழு தோல்வியை ஏற்க மறுத்ததாகக் கூறினார் ஆர்சனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர். "உடலளவிலும் மனதளவிலும் இது ஒரு சோதனையாக இருந்தது. அவர்கள் வேகமாக ஆட்டத்தைத் தொடங்கினாலும் மனதளவில் வலிமையானவர்கள் நாங்கள்தான் என்பதை நிரூபித்தோம்," என்றார் வெங்கர்.
ஆட்டத்தில் வென்று மூன்று புள்ளிகளை முழுமையாகப் பெற விரும்பினோம் என்ற அவர், இருப்பினும் மூன்று கோல்களை விட்டுத் தந்து அதன்பின் மீண்டெழுந்த வீரர் களின் மனவுறுதியைப் பாராட்டாமல் இருக்க முடியாது என்றும் சொன்னார். 16வது நிமிடத்தில் சார்லி டேனியல்ஸ், 20வது நிமிடத்தில் பெனால்டி மூலம் காலம் வில்சன், 58வது நிமிடத்தில் ரையன் ஃபிரேசர் ஆகியோர் கோலடிக்க, ஆட்டத்தின் 69வது நிமிடம் வரை போர்ன்மத் 3-0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், 70வது நிமிடத்தில் ஆர்சனலின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார் நட்சத்திர ஆட்டக்காரர் அலெக்சிஸ் சான்செஸ். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் லூக்காஸ் பெரெசின் கால்கள் மூலம் ஆர்சன லுக்கு இன்னொரு கோல் வந்தது.
கிரிஸ்டல் பேலஸ் குழுவுக்கெதிரான ஆட்டத்தில் பின்னங்காலால் அற்புதமான கோலை அடித்த ஒலிவியர் ஜிரூட் (வலது), நேற்று அதிகாலை போர்ன்மத் குழுவுக்கு எதிரான ஆட்டத்திலும் ஆர்சனல் குழுவைத் தோல்வியின் பிடியிலிருந்து மீட்டார். படம்: ஏஎஃப்பி