மட்ரிட்: 2017ஆம் ஆண்டைத் தோல்வியுடன் தொடங்கியிருக்கிறது பார்சிலோனா காற்பந்துக் குழு. ஸ்பானிய மன்னர் கிண்ணத்தின் காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் சுற்று ஆட்டத்தில் பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது அத்லெட்டிக் பில்பாவ் குழு. கடந்த நான்கு ஆண்டுகளில் அத்லெட்டிக் குழு பார்சாவைத் தோற்கடித்தது இதுவே முதன்முறை. ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் அரிட்ஸ் அடுரிஸ், 28வது நிமிடத்தில் இனாக்கி வில்லியம்ஸ் என முதல் பாதியிலேயே இரு கோல்களைப் போட்டு பார்சாவைத் திணறடித்தது அத்லெட்டிக் குழு.
பிற்பாதியின் ஏழாவது நிமிடத்தில் கோலடித்து அக்குழுவின் முன்னிலையை ஒன்றாகக் குறைத்தார் நட்சத்திர பார்சா ஆட்டக்காரர் மெஸ்ஸி. 74வது, 80வது நிமிடங்களில் இரு அத்லெட்டிக் ஆட்டக்காரர்கள் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டாலும் பார்சாவால் எதிரணியின் தற்காப்பை உடைத்து மேலும் கோலடிக்க இயலவில்லை. 2008க்குப் பிறகு ரியால் மட்ரிட் குழுவைத் தவிர வேறு எக்குழுவும் பார்சாவை மன்னர் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற்றியது இல்லை. பார்சா-அத்லெட்டிக் இடையிலான இரண்டாவது ஆட்டம் 11ஆம் தேதி நடக்கிறது.
தோல்வியால் மனமுடைந்த சக வீரர் அல்பாவை (அமர்ந்திருப்பவர்) தேற்றும் பார்சிலோனாவின் சுவாரெஸ். படம்: ஏஎஃப்பி