வெலிங்டன்: கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாகக் கருதப்பட்டு வந்த பங்ளாதேஷ் இப்போது முன்னணி அணிகளுக்குச் சவால்விடும் வகையில் உருவெடுத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் அந்த அணி தனது முதல் இன்னிங்சில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 542 ஓட்டங்களை எடுத்திருக்கிறது. ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 31 பவுண்டரிகளுடன் 217 ஓட்டங்களை விளாசினார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்ளாதேஷ் வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள். அவருக்கு நல்ல ஒத்துழைப்புத் தந்த அணித்தலைவர் முஷ்ஃபிகுர் ரகிம் 159 ஓட்டங்களைக் குவித்தார்.
இருவரும் இணைந்து ஐந்தாம் விக்கெட்டுக்கு 359 ஓட்டங்களைச் சேர்த்தனர். இதன் மூலம், ஒரே விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்களைக் குவித்த பங்ளாதேஷ் இணை என்ற சாதனையை அவர்கள் படைத்தனர். நியூசிலாந்து மண்ணில் அந்நிய அணி வீரர்கள் இருவர் சேர்ந்து எடுத்த அதிகபட்ச ஓட்டங்களும் இதுதான். பங்ளாதேஷ் அணியின் முதல் ஆறு வீரர்களில் நான்கு பேர் அரை சதம் கடந்ததும் இதுவே முதன்முறை. தமிம் இக்பால் (56), மொமினுல் ஹக் (64) ஆகியோரே மற்ற இருவர்.