லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திரப் பந்தடிப்பாளர் ஜோ ரூட் இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் (ஐ.பி.எல்.) விளையாட மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்தப் பருவத்தில் ஐ.பி.எல். போட்டியில் ஜோ ரூட்டை விளையாட வைக்க சில அணிகளின் நிர்வாகங்கள் அவரை அணுகின. ஆனால் அவர் தமக்குக் கிடைத்த இந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டார்.
"இந்த ஆண்டு தொடர்ச்சியாகப் பல அனைத்துலகப் போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது. இதனால் குடும்பத்தைவிட்டு நீண்டகாலம் பிரிந்து இருக்கும் நிலை ஏற்படும். எனவே ஐ.பி.எல். சமயத்தில் கிடைக்கும் நேரத்தை எங்கள் குடும்பத்தின் புதிய வரவான மகன் ஆல்பிரட்டுடன் செலவிட விரும்புகிறேன்.
"ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதன் மூலம் மிகச் சிறந்த அனுபவம் கிடைக்கும். ஆட்டத்திறனை மேம்படுத்துவதற்கு உதவிக்கரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தற்போதைய சூழலில் அந்தச் சமயத்தில் எனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதற்கு முன்னுரிமை கொடுக்கவே விரும்புகிறேன். அதனால் இந்த முறையும் ஐ.பி.எல். போட்டியில் என்னால் ஆட முடியாது' என்று ஜோ ரூட் தெரிவித்தார்.