கோல்கத்தா: இந்தியா, இங்கிலாந்து அணி கள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கோல்கத்தாவில் நடைபெறுகிறது. இதுவரை நடந்து முடிந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வாகை சூடி இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியையும் தனக்குச் சொந்தமாக்கி 'ஹாட்ரிக்' வெற்றி பெற இந்தியா இலக்கு கொண்டுள்ளது. புனேயில் நடைபெற்ற முதல் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் கட்டாக்கில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று சிங்கப்பூர் நேரப்படி மாலை 4 மணிக்கு கோல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் அணித் தலைவர் விராத் கோஹ்லி, கேதர் ஜாதவ் ஆகியோர் சதம் அடித்தனர். இரண்டாவது போட்டியில் டோனி, யுவராஜ் சிங் ஆகியோர் சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்தியாவின் பந்தடிப்பு வலிமையாக இருக்கும் நிலையில் காயம் காரணமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் இன்று களம் இறங்குவது சந்தேகம்.
மூன்றாவது ஒருநாள் போட்டிக்காக சக வீரர்களுடன் ஈடன் கார்டன்சில் பயிற்சி செய்யும் டோனி (இடது). படம்: ஏஎஃப்பி