லண்டன்: போர்ன்மத் குழுவிற்கெதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் செல்சி குழு 1=0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இருந்தாலும், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை வீணாக்காமல் இருந்திருந்தால் கோல் வித்தியாசம் அதிகமாகி இருக்கும் என்று கூறினார் வெற்றி கோலை அடித்த ஈடன் ஹஸார்ட் (படம்). போட்டியை வென்றது மகிழ்ச்சியைத் தந்தாலும் முதல் பாதியில் மூன்று அல்லது நான்கு கோல்களை அடித்திருக்கலாம் என்று ஹஸார்ட் ஆதங்கப்பட்டார். முற்பாதியில் கிடைத்த இரண்டு அற்புதமான கோல் வாய்ப்புகளைத் தவற விட்டார் இந்தப் பருவத்தின் தொடக்கத்தில் ரியால் மட்ரிட் குழுவில் இருந்து செல்சிக்கு மாறிய ஸ்பானிய ஆட்டக்காரர் அல்வாரோ மொராட்டா.
இருந்தாலும் மொராட்டா மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார் செல்சி நிர்வாகி அன்டோனியோ கோன்டே. "உண்மையாகச் சொன்னால், மொராட் டாவின் கடப்பாடு, ஆர்வம், இறுதி வரை விட்டுக்கொடுக்காது போராடும் குணம் ஆகியவை எனக்கு மகிழ்ச்சியைத் தருகின் றன. அவரால் இன்னும் சிறப்பாக விளை யாட முடியும். அதேவேளையில், தசையில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை என் பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்," என்றார் கோன்டே. பட்டத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதைவிட முதல் நான்கு நிலைகளுக்குள் வர செல்சி இலக்கு கொண்டுள்ளதா எனக் கேட்டதற்கு, "இப்போதைய நிலையில் ஒவ்வோர் ஆட்டமாக அணுகவேண்டும் என்ற யதார்த்த நிலையுடன் நாங்கள் செயல்பட வேண்டியது அவசியம்.
இப்போது 19 புள்ளிகளுடன் ஐந்தாம் நிலையில் இருக்கிறோம். சாம்பியன்ஸ் லீக்கில் எங்களது பிரிவில் முதலிடத்தில் உள்ளோம். லீக் கிண்ணத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னோறி இருக்கிறோம். எங்களால் முடிந்த அளவுக்குப் போட்டிபோடுவோம்," என்று பதிலுரைத்தார். முன்னதாக நடந்த ஆட்டங்களில் லிவர்பூல் 3=0 என்ற கோல் வித்தியாசத்தில் ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவையும் மான்செஸ்டர் சிட்டி 3=2 என்ற கணக்கில் வெஸ்ட் புரோம்விச் அல்பியனையும் வென்றன. சொந்த அரங்கில் சுவான்சி சிட்டியை எதிர்கொண்ட ஆர்சனல் தொடக்கத்தில் ஒரு கோலை விட்டுத்தந்தபோதும் மீண்டு எழுந்து இரு கோல்களை அடித்து வெற்றியைச் சுவைத்தது. சிட்டி 28 புள்ளிகளுடன் பட்டியலின் முதல்நிலையில் நீடிக்கிறது.

