வெலன்சியா: ஸ்பானிய அரசர் கிண்ண அரை இறுதிச் சுற்றில் வெலன்சியா குழுவை வீழ்த்தி பார்சிலோனா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று அதிகாலை நடந்த அரையிறுதி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பார்சிலோனா 2-0 என்ற கோல் கணக்கில் வெலன்சியாவைத் தோற்கடித்தது. அரையிறுதி முதல் சுற்றிலும் 1-0 என பார்சிலோனாவே வென்றிருந்ததால் ஒட்டு மொத்த கோல் கணக்கிலும் 3-0 என முன்னிலை பெற்று இறுதிக்குள் நுழைந்தது.
அண்மையில் லிவர்பூல் குழுவிலிருந்து பார்சிலோனாவிற்கு மாறிய பிரேசில் ஆட்டக்காரர் ஃபிலிப் கொட்டின்யோ ஆட்டத்தின் முதல் கோலை போட்டார். 49வது நிமிடத்தில் விழுந்த அந்த கோலே பார்சிலோனா சார்பில் அவர் அடித்த முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் முடிய எட்டு நிமிடங்கள் இருந்தபோது தன் பங்கிற்கு ஒரு கோலடித்து பார்சிலோனாவின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார் இவான் ரகிட்டிச். நடப்பு வெற்றியாளரான பார்சிலோனா அரசர் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருப்பது தொடர்ச்சியாக ஐந்தாவது முறை. இதுவரை 29 முறை அக்குழு அரசர் கிண்ணத்தை வென்றுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் செவிய்யா குழுவுடன் பார்சிலோனா மோத இருக்கிறது.
பார்சிலோனாவிற்காக முதல் கோலை அடித்த மகிழ்ச்சியில் கொட்டின்யோ. படம்: ஏஎஃப்பி

